சென்னை: தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதன்மை செயலாளர் தீரஜ் குமார், முதன்மை இயக்குநர் ஆர்.குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது:தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில்தான் விபத்து நேரும் இடங்கள் கரும்புள்ளிகள் (பிளாக் ஸ்பாட்) அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு மூலம் அடையாளம் காணப்படுகின்றன. 500 மீட்டர் நீள இடைவெளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 பெரிய சாலை விபத்துகள் அல்லது 10 உயிரிழப்புகள் நிகழ்ந்த இடத்தையே கரும்புள்ளி இடமாக போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு அடையாளம் காண்கிறது.