சென்னை: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக அப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதால் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கவுள்ளதால் வழக்கம்போல் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு சமூக நலத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.