நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமித்துள்ள 403 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க நடவடிக்கை வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்களை மாவட்ட வாரியாக தொகுத்து தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாக கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: