வருசநாடு: வருசநாடு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.