தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் : அலுவலர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை : தமிழகம் முழுவதும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.

சாலைப்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றியதாவது:

அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகளும், தரமான ஓடு தளம் கொண்ட சாலைகளும் நவீன தொழில்நுட்பத்தில் அமைப்பதால் வாகனச் செறிவும் கூடுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ்நாட்டில்தான் விபத்து நேரும் இடங்கள் கரும்புள்ளிகள் (Black Spot) அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் 748 கரும்புள்ளிகள் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு (TRW) மூலம் அடையாளம் காணப்படுகின்றன. 500 மீட்டர் நீள இடைவெளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5-பெரிய சாலை விபத்துகள் அல்லது 10-உயிரிழப்புகள் நிகழ்ந்த இடத்தையே கரும்புள்ளி இடமாக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு அடையாளம் காண்கிறது.

கரும்புள்ளிகள் என அடையாளம் காணப்பட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மீண்டும் விபத்துகள் நடைபெறாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

டெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதைப்போல தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கும் டெல்லியிலுள்ள அலுவலர்களை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாலை பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். முக்கிய சந்திப்புகள் மற்றும் வளைவான இடங்களில் எல்லாம் சோலார் விளக்குகளை பொருத்தி விபத்து நடக்காத வகையில் சாலை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலை பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அரசு பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்துதல் ஆக்ரமிப்புகளை அகற்றுதல், புறவழிச்சாலை, வெளிவட்டச்சாலை போன்றவற்றை பெரும் நிதி செலவில் மேற்கொண்டு வருகிறது. அரசு எத்தகைய நடவடிக்கை மேற்கொண்டாலும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலை நாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும் அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் மேலை நாடுகளில் சாலை விபத்துகள் குறைவாக உள்ளதற்கான காரணம் இதுவே.

சாலைப்பாதுகாப்பினை உறுதி செய்ய, நெடுஞ்சாலைத்துறையும், இயன்றளவு உறுதுணையாக இருக்க வேண்டும். சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்போதே விபத்துகள் ஏற்படா வண்ணம் வடிவமைக்கப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவுள்ள இடங்களில் எல்லாம் விபத்துக்கள் ஏற்படாத வகையில், மக்கள் சாலைகளை கடந்து செல்லும்படி மேம்பாலங்கள், உயர்மட்ட பாலங்கள் போன்றவற்றை எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் அமைச்சர்களும், செயலாளர்களும் ஆய்வு கூட்டத்தை நடத்தி, உயிரிழப்பை தவிர்க்க ஆலோசனை வழங்க வேண்டும், சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

கடைசியாக ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வாகனங்கள் செறிவு காரணமாக காற்றில் அதிகபடியான மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சாலைகளின் இரு ஓரங்களிலும் மரங்கள் நட்டு பாதுகாக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: