ஜெ.வின் கொடநாடு கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்த விசாரணை மீண்டும் தொடங்கியது.!

சேலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. அங்கிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் இதரஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்தச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதாவது ஏப்ரல் மாதம் 27ம்தேதி இரவு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.

பின்னர் சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என முக்கிய குற்றவாளியான சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் கொடநாடு வழக்கில் ஆரம்ப கட்டத்தில் இருந்து கோத்தகிரி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், தனது தம்பி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார். கனகராஜின் மனைவி கலைவாணியும் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கனராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கனகராஜ் மர்மச்சாவு வழக்கை முதலில் இருந்து, மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி.அபிநவ் உத்தர விட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கனகராஜ் உயிரிழந்தது தொடர்பான விசாரணை இன்று (22ம்தேதி) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 5 வாகனத்தில் காலை 6.45 மணிக்கு ஆத்தூருக்கு வந்தனர். பின்னர், ஆத்தூர் அடுத்த சக்தி நகரில் வசிக்கும் கனகராஜ் உறவினர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கனகராஜ் குறித்தும், அவரது உயிரிழப்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: