பந்தலூர் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்-பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் :  பந்தலூர் அருகே அய்யன்கொல்லி காரக்கொல்லி பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி மற்றும் மலப்பொட்டு பகுதியில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளைபொருட்களை சேதம் செய்து வருகின்றன.

பௌளஸ் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள தென்னை, வாழை, பாக்கு, இஞ்சி உள்ளிட்ட பயிர்களை தின்று சேதம் செய்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,``இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகள் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதோடு குடியிருப்புவாசிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தும்  யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகள் சேதம் செய்த விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: