பந்திப்பூர் வனப்பகுதியில் ஆண்புலி சிக்கியது

கூடலூர் :  கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கஞ்சிகட்டட  வனப்பகுதியில் கடந்த 19ம் தேதி மாலையில் புலி ஒன்று உடலில் காயங்களுடன்  நடமாட முடியாமல் ஒரே இடத்தில் இருப்பதை வனத்துறை ஊழியர்கள்  பார்த்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தி ஒரு நாள் முழுவதும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி அங்கிருந்து எங்கும் நகராமல் நடமாட முடியாமலும் வேட்டையாட  முடியாமலும் பலத்த காயங்களுடன் இருப்பதை உறுதி செய்தனர்.  

இது குறித்து புலிகள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து  அனுமதி பெற்று  அந்த புலியை நேற்று காலையில் மயக்க ஊசி செலுத்தி  பிடித்தனர். பின்னர் கூண்டில் அடைத்து மைசூருக்கு கொண்டு சென்றனர்.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிபட்ட ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும் மற்றொரு புலியுடனான சண்டையின்போது பலத்த காயம் அடைந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வன உயிரின புத்துணர்வு  முகாமிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் புலி  மீண்டும் வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: