சென்னை: வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டி விலையை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுமார் 1,500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை, பேப்பர், மெழுகு, குளோரைடு, பாஸ்பரஸ் உள்ளிட்ட மூல பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ பாஸ்பரஸ் 410 ரூபாயில் இருந்து 850 ரூபாயாகவும், மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், அட்டை விலை 42 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.