இனி 1 ரூபாய்க்கு தீப்பெட்டி கிடையாது!: டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டி விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு..!!

சென்னை: வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தீப்பெட்டி விலையை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுமார் 1,500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை, பேப்பர், மெழுகு, குளோரைடு, பாஸ்பரஸ் உள்ளிட்ட மூல பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ பாஸ்பரஸ் 410 ரூபாயில் இருந்து 850 ரூபாயாகவும், மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், அட்டை விலை 42 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இது தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாடகை உயிர்வாலும் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. எனவே வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல் ஒரு தீப்பெட்டியின் விலையை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்க சிவகாசியில் நடந்த அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: