ஆயுதப்படை மைதானத்தில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி வீர மரணம் அடைந்த 377 காவலர்களுக்கு துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை-கலெக்டர், எஸ்பி மலர்வளையம் வைத்து அஞ்சலி

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் நேற்று துப்பாக்கி குண்டு முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டு முழங்க மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (சிஆர்பிஎப்) காவலர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலு, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் தர் ரெட்டி மற்றும் 10 பேர்,  அருணாச்சல பிரேதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வார் இகோப் டேட் மற்றும் 2 பேர் வீரமரணமடைந்தனர்.

மேலும் அஸ்ஸாமை சேர்ந்த ஏபி எஸ்.ஐ சுவபன் ராய் மற்றும் 6 பேர், பீகாரை சேர்ந்த ஆய்வாளர்   அஸ்வினி குமார் மற்றும் 5 பேர், சட்டீஸ்கரை சேர்ந்த உதவி ஆய்வாளர் தீபக் பரத்வாஜ் மற்றும் 31 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஐ மோகன்சிங் மற்றும் 3 பேர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை காவலர் தேவேந்திர குமார் பண்டிட் மற்றும் 3 பேர், கர்நாடகாவை சேர்ந்த ஏ.ஏஸ்.ஐ  மூர்த்தி மற்றும் 15 பேர், கேராளாவை சேர்ந்த எஸ்.சி.பி.ஒ ராஜாமணி மன்னன்சேரி மற்றும் ஒருவர், மத்தியபிரதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் சந்தன்லால் உய்கே மற்றும் 14 பேர் ஆகியோர் வீர மரணமடைந்தனர்.

மேலும் மணிப்பூரை சேர்ந்த தலைமை காவலர் சர்சேந்திரா சிங் மற்றும் 2 பேர், மேகாலயாவை சேர்ந்த காவலர் கிளிட்வெட் சுஷாய்ங், ஒடிசாவை சேர்ந்த தலைமை காவலர் சுனில்குமார் நாயக் மற்றும் 3 பேர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஐ  பகவத் சிங் மற்றும் ஒருவர், ராஜஸ்தானை சேர்ந்த காவலர்  ஓங்கார் ராய்கா மற்றும் ஒருவர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் பிரசாந்த் யாதவ் மற்றும் 3 பேர், உத்திரகாண்டை சேர்ந்த தலைமை காவலர் மனோஜ்குமார் மற்றும் 2 பேர், மேற்கு வங்கத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர்  உஜ்ஜல் பரன் தாஸ் மற்றும் 16 பேர், அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணா மற்றும் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.

மேலும் சண்டிகரை சேர்ந்த ஏ.எஸ்.ஐ சுக்பீர் சிங் மற்றும் ஒருவர், டெல்லியை சேர்ந்த ஏ.எஸ்.ஐ ராம்பால் மற்றும் 5 பேர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆய்வாளர் பர்வேஸ் அகமது தார் மற்றும் 16 பேர், லடாக்கை சேர்ந்த தலைமை காவலர் குல்சார் அஹமது,  அஸ்ஸாம் ரைபிள்ஸை சேர்ந்த வாரண்ட் அதிகாரி பீரேந்திர சிங் மற்றும் 2 பேர், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் உமேத் சிங்  மற்றும் 46 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் நாகேந்திர பிரசாத் மற்றும் 7பேர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.

மேலும் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த துணை படை தலைவர் விகாஸ்குமார் மற்றும் 81 பேர்,  இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி படை தலைவர் ரவீந்திர சிங் மற்றும் 53 பேர், என்.எஸ்.ஜி யை சேர்ந்த ரேஞ்சர் மகுல்கர் வைபவ் சுரேஷ், எஸ்எஸ்.பியைச் சேர்ந்த தலைமை காவலர் ராஜேஸ் மாட்டோ மற்றும் 4 பேர், எப்.எஸ் சி.டி மற்றும் எச்.ஜி ஆகிய பிரிவை சேர்ந்த எச்.ஜி அண்ணாமலை மற்றும் 2 பேர், என்.டி.ஆர்.எப் பிரிவை சேர்ந்த ஏ.எஸ்.ஐ நோன்தோம்பாம் பீனோய் மீட்டாய், ரயில்வே பாதுகாப்பு படைச் சேர்ந்த எஸ்.ஐ பூரண் சிங் நெகி மற்றும் 7 பேர் ஆகிய மேற்படி 377 காவல்துறையினர் ‘உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்” என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள்.

இதனை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை அனுசரிக்கும் நாளாக நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் போலீசார் ஒன்று திரண்டு அணிவகுத்து குண்டு முழங்க வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: