தமிழகத்திலும் அரங்கேறிய நீட் முறைகேடு! : 177 கேள்விகளுக்கு விடை எழுதிய மாணவனுக்கு ஓஎம்ஆர் ஷீட்டில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சென்னை : நீட் தேர்வில் 177 கேள்விகளுக்கு விடை எழுதியிருந்த காஞ்சிபுரம் மாணவன் ஒருவன் வெறும் 6 கேள்விகளுக்கு மட்டுமே விடை அளித்ததாக ஓஎம்ஆர் சீட்டில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சுஷில் குமார் மகன் ஆயுஷ், கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார். மொத்தம் உள்ள 180 கேள்விகளில் 177 கேள்விகளுக்கு விடை அளித்து இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தனது ஓஎம்ஆர் ஷீட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

6 கேள்விகளுக்கு மட்டுமே ஆயுஷ் பதில் அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை மற்றும் பிரதமர் அலுவலகம் தரப்பிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தும் பதில் கிடைக்கவில்லை என்று மாணவன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடம் தவறை சுட்டி காட்டும் வகையில் ஒரு கேள்விகளுக்கு 200 ரூபாய் வீதம் 177 கேள்விகளுக்கு 35000 ரூபாய் செலுத்தி மறு மதிப்பீட்டிற்கும் மாணவன் விண்ணப்பித்துள்ளார். அதற்கும் பதில் கிடைக்காததால் மாணவரின் குடும்பமே செய்வதறியாது திகைப்பில் உள்ளது .

விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால் மாணவர் ஆயுஷ் நீட் தேர்வுக்காக செலுத்திய கடின உழைப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் சூழலில் இது போன்ற குளறுபடிகளால் முறைகேடுகள் நடக்க ஒன்றிய அரசு வழிவகுத்து வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

Related Stories: