'100 கோடி என்பது வெறும் எண் அல்ல.. புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!' - பிரதமர் மோடி உரை

டெல்லி: நாட்டும் மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தான் 100 கோடி தடுப்பூசி சாதனை சாத்தியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நேற்று மிகப்பெரிய சாதனை படைத்து நாம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம். 257 நாட்களுக்கு 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது புதிய சாதனையின் தொடக்கம் என பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி தான் இந்த பரிசு. கடுமையான சோதனைக்கிடையே இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றப்பட்டது. உலக அளவில் தடுப்பூசிகள் செலுத்த தொடங்கிய போது இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள் தொகையை கொண்ட இந்தியா தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவார்கள் என கேள்விகள் எழுப்பப்பட்டன. தடுப்பூசிகள் செலுத்த தொடங்கிய போது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம்.

கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படிடையில் வகுக்கப்பட்டது. கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்தது. கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் மிக எளிமையாக கொண்டு சேர்த்தது. உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. கொரோனா தாக்கத்தால் துவண்டுவிடாமல் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்தினோம்.

விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நம் மக்களை பாதுகாத்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம். கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம். விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்புவது எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறையில் உற்சாகத்தை அதிகரித்தது என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: