காஞ்சி உள்பட 9 மாவட்டங்களுக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்: உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 28  மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என  மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து அக்டோபர் 6, 9 ஆகிய 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் (20ம் தேதி) பதவியேற்றனர்.

இந்நிலையில்  மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மற்றும் துணை தலைவர்,  கிராம ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு இன்று காலை மறைமுக தேர்தல் நடக்கிறது. இந்த மறைமுக தேர்தலில்  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களை மறைமுகமாக வாக்களித்து தேர்ந்தெடுப்பர். இதற்கிடையே  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்ற பின்னர் பதவிப்பிரமாணம் செய்யாமல், இருந்தால் அவர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்த பின்னர் தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 அவ்வாறும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளாதவர்கள், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அவரது பதவிக்காலம் துவங்குகிற நாளான 20.10.2021ல் இருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவோ அல்லது முதல் மூன்று கூட்டங்களில் ஒன்றிலோ இதில் எது முந்தையதோ அதற்குள்ளாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மறைமுக தேர்தல் நடக்கும் இடங்களில் பிரச்னையை தடுக்கும் வகையில் போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Stories: