4 பேரை கொன்ற டி23 புலியை கொல்லாமல் பிடித்த வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு: புலியின் குணாதிசயங்களை ஆராய அரசுக்கு அறிவுறுத்தல்

சென்னை:  நீலகிரி மசினக்குடியில் 4 பேரை கொன்ற டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் புகுந்த டி23 எண்ணிட்ட புலி 4 பேரை கொன்றது. இந்த  புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை.இதையடுத்து,  புலியை சுட்டுக் கொல்வது  உள்பட அதை வேட்டையாடுவதற்கான  உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்  பிறப்பித்திருந்தார்.இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் பீப்பிள் இன் கேட்டல் ஆப் இந்தியா என்ற விலங்குகள் நல அமைப்பு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில்  குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அந்த புலியை கொல்லக்கூடாது. நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன. உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு பிளீடர் பி.முத்துக்குமார் தெரிவித்தார். அரசின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: