ஜெயலலிதா பிறந்தநாளன்று அரசு சார்பில் மரியாதை: அமைச்சர் பொன்முடி அறிக்கை

சென்னை:  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர்கள், தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டுமே அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. இனி வருங்காலங்களில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் (தமிழ்நாடு மாநில  உயர்கல்வித்துறை  மன்ற வளாகம்) நிறுவப்பட்டுள்ள உருவச் சிலைக்கு ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதா சிலையினை அதிமுக சார்பில் பராமரிப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் யாவும்  பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், இந்நேர்வில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறையில்லாத நிலையில், ஜெயலலிதா உருவச் சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும்.

Related Stories: