குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீச்சு துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

தண்டையார்பேட்டை: திரு.வி.க.நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) குள்ளமணி (32), பிரபல ரவுடி. இவர் மீது திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த 20 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கும், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் திருநங்கையை பார்க்க அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள், மணிகண்டனை கண்டித்துள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை பெட்ரோல் குண்டுடன் சுனாமி குடியிருப்புக்கு வந்த மணிகண்டன், தன்னிடம் தகராறு செய்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதற்கு பதிலாக, அருகில் உள்ள ரூபகாந்த் என்பவரின் வீட்டின் மீது வீசியுள்ளார். இது, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் மணிகண்டன் தப்பியோட முயன்றார். அவரை விரட்டி, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி திருநங்கையின் பாட்டி ராணியை மணிகண்டன் கத்தியால் வெட்டியதும், இதனால், ராணியின் உறவினர் மாரிமுத்து கொடுத்த புகாரின்படி, மணிகண்டனை போலீசார் கைது செய்ததும், ஜாமீனில் வெளியே வந்த அவர், மாரிமுத்துவை பழிவாங்குவதற்காக திட்டமிட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: