புதுடெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,‘‘இந்த வழக்கில் புதியதாக வாதங்களை முன்வைக்க ஒன்றும் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே அனைத்தும் முடிந்து விட்டது.
மேலும் ஆணையத்தின் விசாரணையும் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னதாக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும். இதில் வழக்கு விசாரணை வேண்டுமென்றே மருத்துவமனை தரப்பில் தாமதப்படுத்தப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கானது நேற்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வழக்கை ஒத்திவைக்ககோரி நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கை வரும் 26ம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.