புழல்: செங்குன்றம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (36). இவரது மனைவி ஆயிஷா ஷெரீப் (30), கடந்த மார்ச் மாதம் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில், தவணை முறையில், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கியுள்ளார். இதற்கு கடந்த 4 மாதமாக தொடர்ந்து, ரூ.3,250 கட்டினார். 5வது மாத தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், லோன் வழங்கிய தனியார் வங்கி ஊழியர்கள் சீனிவாசன், சுதாகர் ஆகியோர், தவணை தொகை கேட்டு, ஆயிஷா ஷெரீப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஷேக் அப்துல்லா, பண கஷ்டம் காரணமாக இந்த மாத தவணையை செலுத்த முடியவில்லை, என தெரிவித்துள்ளார். அப்போது, வங்கி ஊழியர்கள் ஷேக் அப்துல்லாவை மரியாதை குறைவாக பேசியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஷேக் அப்துல்லாவை வங்கி ஊழியர்கள் சராமரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு, ஆயிஷா ஷெரீப் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் வங்கி ஊழியர்களை தேடி வருகின்றனர்.