டி20 உலக கோப்பை சூப்பர்-12 சுற்றில் வங்கதேசம்

அல் அமெரட்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தகுதிச் சுற்றில் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில்  பி பிரிவில் உள்ள வங்கதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் நேற்று விளையாடின. ஓமனின் அல் அமெரட் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அவ்வப்போது விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் முகமதுல்லா 50(28பந்து, 3பவுண்டரி, 3 சிக்சர்), ஷாகிப் அல் அசன் 46(37பந்து, 3 சிக்சர்), முகமது சய்ப்புதீன் 19(6 பந்து) ரன் விளாச வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181ரன் குவித்தது. பப்புவா தரப்பில் மோரியா, ராவு, வாலா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய  பப்புவா 10.3ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 29ரன் மட்டுமே எடுத்திருந்தது. சாத் சோபரை(11ரன்) தவிர யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. ஆனால் விக்கெட் கீப்பர் கிப்ளின் டோரிகா மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46*(34பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்)ரன் குவித்தார். மற்றவர்கள் யாரும் கை கொடுக்காததால் பப்புவா 19.3ஓவரில் 97ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் வங்கதேசம் 84ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் வங்கதேசத்தின் ஷகிப் 4 விக்கெட் எடுத்தார். உலக கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக பப்பூவா வெளியேற, வங்கதேசம் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories: