சேலம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த வழக்கை சேலம் போலீசார் மீண்டும் விசாரிக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் அடுத்த 5 தினங்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.