மீனம்பாக்கம்: நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது சிகரெட் புகைத்து சக பயணிகளுக்கு பெரும் இடையூறு செய்த நபரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் 149 பயணிகளுடன் வந்தது. அந்த விமானத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபீக் (53) பயணம் செய்துள்ளார். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவிட்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணி முகமது ரபீக், தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைத்துள்ளார். விமானத்தின் உள்ளே புகை மண்டலமாக மாறியதால் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பயணி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்துள்ளார். பயணிகள் தட்டிக்கேட்டபோது, ‘’நான் செயின் ஸ்மோக்கர்” என்னால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது’’ என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.