சென்னையில் வரும் 23-ம் தேதி 6-வது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 23.10.2021 அன்று நடைபெறவுள்ள 6-வது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (அக். 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்தி பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,35,865 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் பொழுது, ஆர்வமுடன் கலந்து கொண்டு கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது சிறப்பு முகாம்களின் மூலம் தெரிய வருகிறது.

முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், 12.09.2021 அன்று நடைபெற்ற முதல் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,91,350 கோவிட் தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற இரண்டாவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 2,02,931 கோவிட் தடுப்பூசிகளும், 26.09.2021 அன்று நடைபெற்ற மூன்றாவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 2,25,627 கோவிட் தடுப்பூசிகளும் மற்றும் 03.10.2021 அன்று நடைபெற்ற நான்காவது தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,58,144 கோவிட் தடுப்பூசிகளும், 10.10.2021 அன்று நடைபெற்ற 5வது தீவிர கோவிட் தடுப்பூசி முகாமில் 1,71,833 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 20.10.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 36,14,747 முதல் தவணை தடுப்பூசிகள், 20,71,455 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என, மொத்தம் 56,86,202 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 11,27,748 முதல் தவணை தடுப்பூசிகளும், 3,05,920 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என, 14,33,668 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 20.10.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 71,19,870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் 23.10.2021 அன்று 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6-வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களின் மூலம் சுமார் 2.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் உட்பட மொத்தம் 16,000 நபர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 3,24,760 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 1,36,640 கோவேக்சின் தடுப்பூசிகளும் என, மொத்தம் 4,61,400 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: