சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு போதுமான தண்ணீர் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கழிவுநீரை மறுசுழற்சி செய்து ஏரிகளுக்கு திருப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி நகரில் நாள் ஒன்றுக்கு 5 கோடியே 70 லட்சம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ஏரியில் விட பணிகள் நடந்து வருவதாகவும், சோதனை முயற்சியாக தற்போது 1 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.