'சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓராண்டுக்கு போதுமான நீர் உள்ளது'!: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..!!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு போதுமான தண்ணீர் இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கழிவுநீரை மறுசுழற்சி செய்து ஏரிகளுக்கு திருப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி நகரில் நாள் ஒன்றுக்கு 5 கோடியே 70 லட்சம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ஏரியில் விட பணிகள் நடந்து வருவதாகவும், சோதனை முயற்சியாக தற்போது 1 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 14 கோடி லிட்டர் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார். திமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதங்களில் சென்னை மாநகராட்சியில் 700 கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நேரு கூறினார். மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் தான் கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: