கோவை: கோவை-திருச்சி ரோடு மேம்பாலம் பணிக்காக வாலாங்குளம் பைபாசில் இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ளதால், பழைய சுங்கம் ஏரிமேடு பகுதியில் இருந்த 32 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் நேற்று இடித்தனர். கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் முதல் சுங்கம் வரை நான்கு வழி மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2019 மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இதில், ராமநாதபுரம் பகுதியில் இருந்தும் வரும் வாகன ஓட்டிகள் சுங்கம் சந்திப்பில், வாலாங்குளம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில், இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், வாலாலங்குளம் பைபாசில் இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ள நிலையில், ஏரிமேடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் காலஅவகாசம் அளித்தனர்.