டெல்லி: உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. எந்த ஆய்வின் அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை பெறுவோர் இடஒதுக்கீடு பெறலாம் என எந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. ஓ.பி.சி பிரிவினருக்கும் உயர் ஜாதி பிரிவினருக்கும் ஒரே மாதிரியான வருமான உச்ச வரம்பு நிணயிப்பது எப்படி சரியாகும்.
உயர்ஜாதி இட ஒதுக்கீடு தொடர்பான சினோ கமிட்டி அறிக்கையை இதுவரை பார்த்ததே இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சொத்துக்களை கணக்கில் கொள்ளாமல் வருமானத்தை மட்டும் கணக்கிடுவது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர். வருமானம் அதிகம் உள்ள ஓ.பி.சி பிரிவினரை கண்டறிய கிரீமிலேயர் இருப்பது போல் உயர் ஜாதி இட ஒதுக்கீட்டுக்கு என்ன வரம்பு உள்ளது என்று வினவியுள்ளனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். 5 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலம் வைத்திருப்போர், ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வீட்டில் குடியிருப்போர், நகராட்சி பகுதியில் 100 அடிக்கு அதிகமான இடத்திலும், நகராட்சி இல்லாத இடத்தில் 200 அடிக்கு அதிகமான இடத்திலும் குடியிருப்போர் இந்த சலுகையை பெற இயலாது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்புபடி 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவு செல்லக்கூடாது. ஆனால், ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீடு அளவைக் குறைக்காமல், 103-வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.