ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழகத்திலிருந்து கடத்திய ரூ.90 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் எடையுள்ள மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கை வடக்கு, வடமேற்கு, மத்திய வடக்கு கடற்படை தளங்களை சேர்ந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து படகில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தமிழக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 2,272 கிலோ மஞ்சளை கைப்பற்றினர். இலங்கை வடக்கு கடற்படை கமாண்டர் தலைமையில் யாழ்ப்பாணம் அரியாலை கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து சென்றபோது நாட்டுப்படகில் 12 மூட்டையில் பதுக்கி வைக்கப்ப்ட்டிருந்த 601 கிலோ எடையுள்ள மஞ்சளை கைப்பற்றினர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.