இலங்கைக்கு கடத்திச் சென்ற ரூ.90 லட்சம் மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழகத்திலிருந்து கடத்திய ரூ.90 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் எடையுள்ள மஞ்சளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கை வடக்கு, வடமேற்கு, மத்திய வடக்கு கடற்படை தளங்களை சேர்ந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து படகில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தமிழக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 2,272 கிலோ மஞ்சளை கைப்பற்றினர். இலங்கை வடக்கு கடற்படை கமாண்டர் தலைமையில் யாழ்ப்பாணம் அரியாலை கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து சென்றபோது நாட்டுப்படகில் 12 மூட்டையில் பதுக்கி வைக்கப்ப்ட்டிருந்த 601 கிலோ எடையுள்ள மஞ்சளை கைப்பற்றினர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை வடமேற்கு கடற்படை கமாண்டர் தலைமையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்ற கடற்படையினர் புத்தளம் அருகிலுள்ள கொல்லன்கனத்தா கடல் பகுதியில் படகில் 25 மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சளை கைப்பற்றினர். இலங்கை மத்திய வடக்கு கடற்படை கமாண்டர் தலைமையில் மன்னார் கடல் பகுதியில் ரோந்து சென்ற கடற்படையினர் 10 மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 912 கிலோ மஞ்சளை கைப்பற்றினர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 2,272 கிலோ மஞ்சளின் இலங்கை மதிப்பு ரூ.90 லட்சம். இதுகுறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து மஞ்சள் படகில் கடத்தி செல்லப்பட்டதால் மத்திய, மாநில புலனாய்வு துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: