அலுவலகத்திலேயே ஊராட்சி தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 6 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகிப்பவர் யுவராஜ் (38). இவர் நேற்று காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதே அறையில் அவரது அருகே ஊராட்சி செயலாளர் வினோத் (22) என்பவர் அமர்ந்து கொண்டு கணினியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் தலா 3 பேர் வீதம் 6 பேர் வந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இதிலிருந்து இறங்கிய 3 பேர் மட்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது அலுவலகத்தில் தனது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜிடம் வீட்டு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் நீங்கள் யார், எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜின் தலை, கழுத்து, தொடை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி செயலாளர் வினோத் சத்தம் போட்டு கத்தியுள்ளார். ஊராட்சிமன்றத் தலைவர் யுவராஜ் கீழே சாய்ந்ததும் அவர் இறந்து விடுவார் என்ற எண்ணத்தில் கத்தியால் வெட்டிய 3 பேரும் ஓடிச் சென்று அங்கு தயாராக இருந்த 2 மோட்டார் சைக்கில்களில் ஏறி தப்பி தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை அங்கிருந்தவர்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஊராட்சி தலைவர் யுவராஜை  வெட்டி விட்டு,  தலைமறைவாகி விட்ட 6 பேரையும்  தேடி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் யுவராஜின் மனைவி கவிதா பாரதி (31) என்பவர் தேர்தல் முன் விரோதத்தால் தனது கணவரை வெட்டியதாக அடையாளம் தெரிந்த 2 பேர் உள்பட 6 பேர் மீதும் மப்பேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Related Stories: