போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணியிடம் பண மோசடி

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் நடிகை சஞ்சனா கல்ராணி, கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டான்சி மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் கூறியுள்ளார். அதில், ‘கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார்.

அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன். ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பிசிஆர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க இந்திரா நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விசாரித்து, ராகுல் டான்சி உள்பட 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: