சுங்கச்சாவடியை உடைத்த வழக்கு; வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜர்: நவ.15க்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை  கட்சியின் சார்பில் கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதியன்று  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட  14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 7ம்  தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களின்  வழக்கை விசாரிக்க மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் இருப்பதால் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு  மாற்றப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று விழுப்புரம்  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது  வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 12 பேரும் ஆஜராகினர். தொடர்ந்து, விசாரணையை நவ. 15க்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Related Stories: