ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ3.73 கோடி காணிக்கை: கொரோனா பாதிப்புக்கு பிறகு உயர்வு

திருமலை: கொரோனா பாதிப்புக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ3.73 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் குறைவான பக்தர்களே தரிசனம் செய்தனர். இதனால் உண்டியல் வருமானம் மிகவும் குறைந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாளுக்கு நாள் அதிக பக்தர்கள் வருகின்றனர்.

அவ்வாறு சுவாமியை தரிசித்த பக்தர்கள் கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியலில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பணம், நகைகளை காணிக்கை செலுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினமும் விஐபி தரிசனம், ஆன்லைன் மூலம் ரூ300 டிக்கெட், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 27 ஆயிரத்து 482 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இவர்களில் 11 ஆயிரத்து 565 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ3.73 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: