கடல் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க மெரினாவில் ‘கடற்கரை உயிர்காப்பு பிரிவு’: டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவல் துறை மானியக்கோரிக்கையின் போது சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை மாநகர காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 13ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் இயக்குநர் சந்தீப்மிட்டல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பின்புறம் ‘கடற்கரை உயிர்காப்பு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பிரிவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். அப்போது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கடலோர பாதுகாப்பு குழும இயக்குநரும், கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியான சந்தீப் மிட்டல் மற்றும் தீயணைப்பு த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடற்கரை உயிர்காப்பு பிரிவில், ஏற்கனவே மெரினா கடற்கரையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங்கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உயிர்காக்கும் பிரிவுக்கு என தனியாக இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த பிரிவை மேலும் பலப்படுத்தும் வகையில் 50 ஆயுதப்படை காவலர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து கூடுதலாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: