வேலூர் : வேலூர் மாநகராட்சியில் காட்பாடி காந்தி நகர், தொரப்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் பணி முடிந்தும் சாலைகள், தெருக்கள் சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி சேறும் சகதியுமாக மாறி சுகாதார சீர்கேட்டுடன், பொதுமக்கள் நடமாடவும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் தொரப்பாடியிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் பணி முடிந்தும் சீரமைக்கப்படவில்லை. இதனால் தொரப்பாடி அன்னை தெரசா தெரு, திருவள்ளுவர் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமலும், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
அத்துடன் மேற்கண்ட தெருக்களில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் மேற்கண்ட தெருக்கள் மட்டுமின்றி பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்த அனைத்து தெருக்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.