வருசநாடு : கடமலைக்குண்டு பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி குறைந்துள்ளது. ஆனால், கொள்முதல் அதிகரித்து விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, நரியூத்து, தும்மக்குண்டு, காந்திகிராமம், அரசரடி, வெள்ளிமலை, உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி தீவிரமாக நடக்கிறது. இப்பகுதியில் போதிய மழை பெய்ததால் விவசாயப் பணிகள் நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக எலுமிச்சம் பழம் பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் கடமலைக்குண்டு பகுதிகளுக்கு வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது மேலும் கிராக்கி அதிகரித்து வருகிறது, தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூபாய் 45 முதல் 50 வரை விலை போகிறது. இன்னும் சில நாட்களில் எலுமிச்சை விலை அதிகமாக அதிகரிக்கும் நிலை உள்ளது, என்றனர்.