×

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலையதுறையின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி!!

சென்னை : கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதிய விதிகளுக்கு எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம்ஆண்டு கொண்டுவரப்பட்டது.அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவிலில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. பரம்பரை அறங்காவலர்களை நியமித்து அவர்களை கொண்டு தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும். மேலும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விதமான ஆகம விதிகள் உள்ளது.அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும், என்று வாதிட்டார்.

மேற்கண்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர்.மேலும் ஆகம விதிகளை மீறி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 7 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Tags : Treasury , அர்ச்சகர்கள்,இடைக்கால தடை
× RELATED உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி...