பாலக்காட்டில் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யும் 2 வாலிபர்களிடம் ஒரு டன் குட்கா பறிமுதல்-பொள்ளாச்சியில் வாங்கியதாக வாக்குமூலம்

பாலக்காடு :  பாலக்காடு பிராயிரி சுங்கத்தைச் சேர்ந்தவர் ஷிராஜ் (30), கிணாச்சேரியைச் சேர்ந்தவர் கலாதரன் (32). இவர்கள் பாட்டில்களில் குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள். குடிநீர் பாட்டில்களுக்கு நடுவே மறைத்து குட்கா விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.தகவல் அறிந்ததும் கலால்துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கல்மண்டபம் என்ற இடத்தில்  தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, அதில் குட்கா இருந்தது. தொடர் விசாரணையில் அவர்களது வீட்டில் 1 டன் குட்காவை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், குட்காவை பொள்ளாச்சியில் இருந்து ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கி வந்து இங்கு வடமாநிலத்தவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறினர். இது குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: