செம்பனார்கோயிலில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள சின்னசாவடி குளம்-அப்புறப்படுத்த வலியுறுத்தல்

செம்பனார்கோயில் : செம்பனார்கோயிலை அடுத்த மடப்புரம் ஊராட்சியில் சின்ன சாவடி குளம் உள்ளது. இக்குளத்தை அப்பகுதி மக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் குளத்தில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்தன. இக்குளம் மழைக்காலத்தின் போது வடிகாலாக இருந்தது. இவ்வாறு பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தில் தற்போது ஆகாயத்தாமரைகள், செடி கொடிகள் வளர்ந்து கிடக்கிறது.

இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் வடிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சின்ன சாவடி குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: