ஓசூர் அருகே சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தவிப்பு: உரிய தொகை வழங்குவதில் கால தாமதம்

ஓசூர்: ஓசூர் அருகே மூன்றாவது சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மருதாந்தப்பள்ளி ஊராட்சியில் 3வது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் பணம் வழங்குவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

சில தனி நபர்கள் சில நில உரிமையாளர்களிடம் மோசடி செய்து போலியாக தங்கள் பெயரில் நிலம் இருப்பது போன்று சான்றிதழ் பெற்று வருவதாகவும் தெரிகிறது. இதற்கு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துணை போவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை வருவாய் துறையில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். நில உரிமையாளர்கள் போன்று ஏமாற்றும் போலி நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: