போச்சம்பள்ளி: தர்மபுரி வெண்ணாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(43). இவர் கும்பகோணத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமராவதி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். முதுகலை பட்டதாரியான அமராவதி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தினமும் டூவீலரில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமராவதி புதிதாக கார் வாங்கினார். அவருக்கு சரிவர காரை ஓட்டத் தெரியாது என்பதால், டிரைவர் ஒருவர் தினமும் பள்ளிக்கு காரில் வந்து சென்றார். அவரை அழைத்து வரும் டிரைவர், அமராவதியை இறக்கி விட்டு, காரை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி விட்டு சென்று விடுவார். பின்னர், மீண்டும் மாலையில் வந்து, அமராவதியை அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை, டிரைவருடன் அமராவதி பள்ளிக்கு காரில் வந்தார்.
மாலையில், டிரைவர் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றிருந்தார். டிரைவர் இல்லாததால் அமராவதியே பள்ளி வளாகத்தில் இருந்து காரை வெளியே எடுத்துள்ளார். கேட் அருகே வந்த போது, பிரேக் போடுவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் பள்ளி சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆசிரியையை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அமராவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.