திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததால், இடுக்கி அணை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். கேரளாவில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. தற்போது வரை மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடும் நிலச்சரி, வெள்ளத்தால் கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 28 பேர் பலியாகி உள்ளனர்.
இது தவிர 2 மாவட்டங்களிலும் சேர்த்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், வீடுகளை இழந்த ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழையால் ரூ175 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 9,750 ஹெக்டேர் நிலங்கள் அழிந்தன. கேரள மீன்வாரியத்துக்கு மட்டும் சுமார் ரூ18 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மழையின் தீவிரம் குறைந்து உள்ளது.
பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்யவில்லை. ஆனால், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இன்றும் நாளையும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மிமீ, 240 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து இடுக்கி, முல்ைலபெரியாறு, மலம்புழா, நெய்யாறு, பம்பை உள்பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்த பல அணைகள் திறக்கப்பட்டன. இப்போது மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உச்ச நீர்மட்டத்தை நெருங்கியிருந்த கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நேற்று காலை திறக்கப்பட்டது. முதலில் ஒரு மதகும், பின்னர் 2 மதகுகளும் திறக்கப்பட்டன.நேற்று அதிகாலை 5 மணியளவில் பம்பை அணையும் திறக்கப்பட்டது. அதோடு, பம்பை அருகே உள்ள சிறிய அணைகளும் திறக்கப்பட்டதால், பம்பை ஆற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 2018ம் ஆண்டு ஏற்பட்டது போல் பம்பையிலும் கடும் சேதம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.