விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் பிரபல திருமண தகவல் மையத்தில் மனைவிக்கு வரன் தேடிய கணவன்: மாமனார் கொடுத்த புகாரில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி (32). சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜான்சிக்கும், திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதற்கிடையில், சாப்ட்வேர் இன்ஜினியரான ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் ஜான்சி தனது கணவர் ஓம்குமாருடன் அமெரிக்கா சென்றார். அங்கு, தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் மனைவியை பிரிந்து, அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு வந்தார். இவர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஓம்குமார், விவாகரத்து கோரி பூந்தமல்லி சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் இதுவரையில் விவாகரத்து கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஓம்குமார், பிரபல திருமண தகவல் மையத்தில், மனைவி ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென பதிவு செய்தார்.

அதில், தொடர்புக்கு மாமனார் பத்மநாபன் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். இதை பார்த்து, பலர் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பத்மநாபனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும், தனது மகள் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் செய்யவில்லை. தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் கொடுத்தார்.

அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில், மனைவிக்கு வரன் தேடி பதிவு செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: