கொல்கத்தா: பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பெங்காலி நடிகை, தனது சமூக வலைதளத்தில் உள்ள போட்ேடாக்களை அகற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷ் நாட்டின் கொமில்லா, ஃபெனி, ரங்பூர், சிட்டகாங் ஆகிய பகுதிகளிலுள்ள இஸ்கான் கோயில்கள் மீது, மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் ஏற்பட்ட வன்முறையில், அங்குள்ள சிறுபான்மை சமூகத்தினர் சிலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 4,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், பிரபல பங்களாதேஷ் நடிகையும், பெங்காலி படங்களில் நடித்தவருமான ஜெயா அஹ்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பங்களாதேஷில் நடந்த வகுப்புவாத வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், கவிஞர் பட்டாச்சார்யாவின் புகழ்பெற்ற கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார்.
தனது சுயவிவர போட்டோக்களை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டார். அவரது பதிவில் (கவிஞரின் வார்த்தைகள்), ‘மரண பள்ளத்தாக்கான இந்த நாடு என் நாடு அல்ல; மரண தண்டனையை கொண்டாடுபவர்களின் நாடு எனது நாடு அல்ல; வன்முறையால் சுடுகாடாக மாறிய நாடு எனது நாடு அல்ல; ரத்தக்கறை படிந்த வீடு எனது நாடு அல்ல’ என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.