சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், திருநாவுக்கரசு தலைமையில் திங்கட்கிழமை ஈரோட்டில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் சுப்பராயன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சிறப்பு நிலை பேரூராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்பதுடன், தலைவர்களை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்தல் நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தனது வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ள போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் தற்போது விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக சாதாரண பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோதக் கொள்கையைக் கண்டித்தும், ஒன்றிய அரசு சுங்க, கலால் வரிகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி வரும் 30ம் தேதி தமிழகம் முழுவதும் சைக்கிள் ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.