தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு: முதன்மை இயக்குனர் குமார் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில், உதவி பொறியாளர்கள் 269 பேருக்கு உதவி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு வழங்குவதற்கான சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் குமார், அனைத்து தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016 டிசம்பர் 1ம் தேதி வெளியிட்ட உதவி பொறியாளர்களின் முதுநிலை பட்டியல் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முதுநிலை பட்டியலில் திருத்தம் செய்ய 259 பேர் வரைக்கும் மற்றும் கூடுதல் தேர்வாக 10 பேரின் விவரங்கள் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பான விவரங்கள் விடுபடுதல் மற்றும் ஆட்சேபனை ஏதேனும் இருப்பினும் அதுகுறித்து தெரிவிக்கும் உதவிப்பொறியாளர்கள் தங்களது முழுமையான விவரங்களை ஒரு மாத காலத்திற்குள் உரிய வழிமுறையாக சமர்ப்பிக்க வேண்டும். தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை காலதாமதம் இன்றி இந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உதவி பொறியாளர்களின் முதுநிலை தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வெளியிடப்படும் இறுதி தீர்ப்பின்படி இப்பட்டியல் மாறுதலுக்குட்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: