சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உயர்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்ணா பல்கலை கழகத்தின் புதிய துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பொறியியல் கல்வியை மேம்படுத்த பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவீன அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்தும் வகையிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்.28ம் தேதி அண்ணா பல்கலைகழகத்தின் 263வது சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெற்றது.