விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் பிரபல திருமண தகவல் மையத்தில் மனைவிக்கு வரன் தேடிய கணவன்: மாமனார் கொடுத்த புகாரின்பேரில் கைது

சென்னை: விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில், பிரபல திருமண தகவல் மையத்தில் மனைவிக்கு வரன் தேடிய கணவனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி (32). சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜான்சிக்கும், திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர், ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால், கணவருடன் அங்கு வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் மனைவியை பிரிந்து, அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு வந்தார்.

பின்னர், ஓம்குமார், விவாகரத்து கோரி பூந்தமல்லி சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் இதுவரையில் விவாகரத்து கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஜான்சிக்கு வரன் வேண்டுமென பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து, பலர் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவரது தந்தை பத்மநாபனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில், மனைவிக்கு வரன் தேடி பதிவு செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: