மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில், காற்றின் வேகம், மழையின் அளவு, காற்றில் உள்ள ஈரப்பதம் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சூரிய ஒளி மூலம் இயங்கும் தானியங்கி வானிலை கருவி அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் உலக அளவில் புராதன சின்னங்களுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களை மத்திய தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடற்கரை கோயில் வளாகத்தில், வானிலை தகவல் பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தானியங்கி வானிலை கருவி அமைக்கப்பட்டது. இந்த கருவியை சரிவர பராமரிக்காமல்விட்டதால் பழுதானது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் கோரிக்கை ஏற்று அதே இடத்தில் ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேசன் என அழைக்கப்படும் சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி வானிலை கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் நகரின் மழையளவு, காற்றின் வேகம், காற்றில் உள்ள ஈரப்பதம், வெப்பநிலை போன்றவை பதிவாகும். இதன்மூலம் வானிலை பற்றிய தகவல்களை தொல்லியல் துறை தலைமையக இணைய தளம், தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய தளம் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.