இரு தலையுடன் கன்றுக்குட்டி : வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி அருகே கிராமத்தில் இரண்டு தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்தது. இவற்றை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டுவந்ததால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காஞ்சிப்பாடி கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர் தனது வீட்டில் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகின்றார். இவரது வீட்டில் உள்ள ஒரு மாடு இன்று காலை ஒரு பசு கன்று ஈன்றது. அதற்கு இரண்டு தலையுடன் 4 கண்கள் இருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் 4 கால்கள் உள்ளது. கன்றுக்குட்டிக்கு தாயிடம் தானாக பால்குடிக்க முடியவில்லை என்பதால் பாட்டிலில் பிடித்து வாயில் ஊற்றினர். ஆனால் ஒரு வாய் வழியாக செல்லும் பால் உடலுக்குள் செல்லாமல் மற்றொரு வாய் வழியாக வெளியே வந்துவிடுகிறது. இதனால் பால் குடிக்க முடியாமல் கன்றுக்குட்டி தவிப்பது பரிதாபமாக உள்ளது. இதனிடையே இரண்டு தலையுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ள தகவல் கிடைத்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் இருளர் காலனிக்கு வந்தவண்ணம் உள்ளனர். விவசாயியின் வீட்டின் முன் மக்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர்கள் வந்து கன்றுக்குட்டியை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: