கேரளாவுக்கு மீண்டும் எச்சரிக்கை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. தற்போது வரை மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. கடும் நிலச்சரிவு, வெள்ளத்தால் கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 28 பேர் மரணமடைந்துள்ளனர். இது தவிர 2 மாவட்டங்களிலும் சேர்த்து 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. பல வீடுகள் இடிந்து விழுந்தன.இதனால் வீடுகளை இழந்த ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ரூ.175 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 9750 ஹெக்டேர் நிலங்கள் அழிந்தன. கேரள மின்வாரியத்துக்கு மட்டும் சுமார் ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மழையின் தீவிரம் குறைந்து உள்ளது. பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதனால் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோழிக்கோடு உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து இடுக்கி, முல்ைலபெரியாறு, மலம்புழா, நெய்யாறு, பம்பை உள்பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து பல அணைகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த அணைக்கு முதற்கட்ட எச்சரிக்கையான நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தற்போது அணையின் நீர்மட்டம் அபாய அளவை எட்டி உள்ளது. நாளை (இன்று) காலை அணை திறக்கப்படும் என்று நேற்று கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். கடந்த 2018ம் ஆண்டு அணையை திறந்தபோது எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ரூ.200 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களும் நாசமாகின. இதனால் இந்த முறை மிகவும் கவனமாக சிறிது சிறிதாக தண்ணீர் திறக்கப்படும் என்று கேரள மின்வாரிய தலைவர் அசோக் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை 5 மணியளவில் பம்பை அணை திறக்கப்பட்டது. அதோடு பம்பையையொட்டி உள்ள சிறிய அணைகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து பம்பை ஆற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்டது போன்று பம்பையிலும் கடும் சேதம் ஏற்படும் என்ற அச்சம் பொது மக்களிடையே நிலவி வருகிறது.  கேரளாவில் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் கல்லூரிகள் திறப்பு வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரி தேர்வுகளும், பிளஸ்1 தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: