புத்த யாத்ரீகர்களை ஈர்க்க உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையம்: நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்!!

லக்னோ :உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை 2021 அக்டோபர் 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், யோகி ஆதித்யநாத், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.இலங்கையிலிருந்து புத்த பிக்குகள் உள்ளிட்ட 125 நபர்களைத் தாங்கிய விமானம், முதல் விமானமாக இந்த சர்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ளது.இந்த விமான நிலையம் இந்தியாவில் சர்வதேச புத்தமத யாத்ரீகர்களின் விமானப்பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் கோரக்பூரில் இருந்து 53 கிமீ தொலைவில் குஷிநகர் அமைந்துள்ளது. உலகத்தை தனது போதனைகளால் கவர்ந்திழுத்த கவுதம புத்தர் இந்த நகரில் மரணம் அடைந்தார். இது பவுத்த மதத்தின் புனித தலமாக விளங்குகிறது. குஷிநகர் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையக் கட்டடம் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 29-வது சர்வதேச விமான நிலையமாகும்.

குஷிநகர் விமான நிலையத் தொடக்கம், இப்பகுதியில் உள்ள பல புத்தமத இடங்களுக்கான தடையற்ற இணைப்பை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களுக்கு வழங்கும். தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமான இணைப்பு இலங்கை, ஜப்பான், தைவான், தென்கொரியா, சீனா, தாய்லாந்து. வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு குஷிநகர் வருவது எளிதாகும் என்பதோடு, இப்பகுதியின் வளமான பாரம்பரியத்தை அறிமுகம் செய்து வைக்கும்.  இந்த விமானத்  தொடக்கம் மூலம் சுற்றுலா 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது இந்தியாவை புத்த சமய மையமாக உருவாக்கவும், புத்தமதக் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பவும் வழிவகுக்கும்.

Related Stories: