ஒன்றிய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் அக்.30ல் சைக்கிள் பேரணி: முத்தரசன் பேட்டி

ஈரோடு: இந்திய கம்யூ., கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் ஈரோட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மக்கள் நலனில் சிறிதும் கவலை இல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வருவதை இந்திய கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசுக்கு எதிராக வருகின்ற 30ம் தேதி ஒன்றிய, நகர, மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிசட்டம் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் வாரிய தேர்வு வயது வரம்பினை நீக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்த போதே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாகதான் தற்போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரெய்டு நடத்துகின்றனர். அதிமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் தவறு செய்துள்ளனர். தவறு செய்துள்ள முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்பது சட்டரீதியான நடவடிக்கையாகும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: